கடலூர் மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் விநாயகமூர்த்தி என்பவர் பைபர் படகிலும், ராஜவேலு, விஜயகுமார் ஆகியோர் துடுப்பு படகிலும் மீன் பிடித்து கொண்டிருந்தனர். இதனையடுத்து மாலை நேரத்தில் படகுகளை கலெக்டர் அலுவலகம் அருகே ஆற்றங்கரை ஓரம் நிறுத்திவிட்டு சென்றனர். மறுநாள் காலை வந்து பார்த்தபோது படகுகள் தீவைத்து எரிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் வலைகள் தீயில் கருகி நாசமானது. ஒரு வலை காணாமல் போனது. இது தொடர்பாக கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் படகுகளுக்கு தீ வைத்து எரித்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.