தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கூத்தப்பாடி அக்ரஹாரம் பகுதியில் முருகன்(24) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெண்ணிலா(20) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று முருகன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

அப்போது முருகன் கூறியதாவது, எனக்கு கடன் பிரச்சனை இருப்பதால் எனக்கு வரவேண்டிய சொத்தை பிரித்து தருமாறு கேட்டேன். ஆனால் எனது தந்தை சொத்தை பிரித்து தர மறுத்து தெரிவித்தார். இதனால் மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார். அவருக்கு போலீசார் அறிவுரை கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க செய்தனர். மேலும் முருகன், அவரது மனைவி குழந்தைகளை போலீசார் தர்மபுரி டவுன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.