தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பாரப்பட்டி அருகே இருக்கும் கிராமத்தில் 29 வயதுடைய லாரி டிரைவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவியான 19 வயதி இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் 1 1/2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதுகுறித்து அறிந்த பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள நினைத்தனர்.

அதற்குள் வாலிபரின் பெற்றோர் அவருக்கு வேறு ஒரு பெண்ணை நிச்சயம் செய்தனர். நேற்று அவர்களது திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதனை அறிந்த கல்லூரி மாணவி கடந்த 23-ஆம் தேதி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, காதலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடக்க உள்ளதால் விஷம் குடித்ததாக தெரிவித்தார். இதனால் போலீசார் லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். அதன் பிறகு லாரி டிரைவரின் பெற்றோர் உனது விருப்பப்படியே காதலியை திருமணம் செய்து வைக்கிறோம் என தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.