திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேம்பார் பட்டியில் வெள்ளைமெய்யன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாண்டியன் என்ற மகன் உள்ளார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பாண்டியனுக்கும் நத்தம் கல்வெளிப்பட்டியைச் சேர்ந்த வளர்மதி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. தற்போது வளர்மதி 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். நேற்று முன்தினம் கணவன் மனைவி இருவரும் திண்டுக்கல்லில் இருந்து பொன்னமராவதி நோக்கி சென்ற அரசு பேருந்தில் பயணித்தனர்.

அவர்கள் கோபால்பட்டி பேருந்து நிறுத்தத்தில் ஏறி நத்தத்தில் இருக்கும் வளர்மதியின் தந்தையிடம் இருசக்கர வாகனம் வாங்குவதற்காக சென்றுள்ளனர். அப்போது பாண்டியன் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் பேருந்துக்குள் வைத்தே கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த பேருந்து ஒத்தக்கடை அருகே சென்ற போது பின்பக்க படிக்கட்டில் இருந்து பாண்டியன் தனது மனைவியை காலால் எட்டி உதைத்து கீழே தள்ளினார். இதனால் படுகாயமடைந்த வளர்மதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அந்த பேருந்தில் குறைந்த அளவில் பயணிகள் இருந்தனர். யாரும் பாண்டியனின் செயலை கவனிக்கவில்லை. அதன் பிறகு பாண்டியன் பேருந்து முன் பகுதிக்கு சென்று டிரைவரிடம் எனது மனைவியை கீழே தள்ளிவிட்டேன் பேருந்தை நிறுத்துங்கள் என கூறியுள்ளார். இதனால் பதறி போன ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வளர்மதியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்