கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையில் போலீசார் கடந்த 2 நாட்களாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் போலீசார் புன்னம்சத்திரம், தளவாபாளையம், தோட்டக்குறிச்சி, வேலாயுதம்பாளையம், கடைவீதி, தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன சாதனையில் ஈடுபட்ட போது 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்தது தெரியவந்தது.

இதனால் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த சிறுவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்நிலையில் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் இரு சக்கர வாகனங்களை ஓட்டுவதற்கு அனுமதி அளித்தால் பெற்றோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.