சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் பகுதியில் ரத்தினவேல் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரத்தினவேலின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் உங்களது நிலத்தில் தனியார் செல்போன் கோபுரம் அமைப்பதாகவும், அதற்கு முன்பணமாக 40 லட்ச ரூபாயும் மாத வாடகையாக 40 ஆயிரம் ரூபாயும் தருகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிலிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது, மர்ம நபர்கள் நில ஆவணங்கள், ஆவண கட்டணம், சுங்க கட்டணம் என கூறி ரத்தினவேலிடம் இருந்து பல்வேறு தவணைகளாக 4 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாயை வாங்கிக் கொண்டனர். ஆனால் கூறியபடி அவர்கள் செல்போன் கோபுரம் அமைக்கவில்லை. பணத்தையும் திரும்ப தரவில்லை. இதுகுறித்து ரத்தினவேல் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பண மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.