சென்னை மாவட்டத்தில் உள்ள முகப்பேர் மோகன்ராம் நகரில் முத்துலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கேரளாவில் வசிக்கும் வர்கீஸ் மற்றும் தங்கம்மாள் ஆகியோருக்கு சொந்தமான இடத்தை பாக்யராஜ், ஜெயபால், கமல் ஆகிய 3 பேரும் இணைந்து 31 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு முத்துலட்சுமியிடம் விற்பனை செய்துள்ளனர்.

இதனையடுத்து வர்கீஸ் மற்றும் தங்கம்மாள் ஆகிய இருவரும் அமெரிக்காவில் வசிப்பதும், தனக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்த ஜெயபால், பாக்யராஜ், கமல் ஆகியோர் வர்கீஸ், தங்கம்மாள் என்ற பெயரில் வேறு இரண்டு பேரை ஆள்மாராட்டம் செய்து போலியான ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்டதும் முத்துலட்சுமிக்கு தெரியவந்தது. இதுகுறித்து ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 6 வருடங்களாக ஜெயபால் தலைமறைவாக இருந்துள்ளார். அவரை நேற்று போலீசார் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.