திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டான் பெருமாள் சன்னதி தெருவில் தில்லைநாயகம்(71) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மாலை நெல்லை சந்திப்பு பகுதிக்கு வந்து ஒரு வங்கியில் முப்பதாயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு வங்கியில் இருந்து வெளியே வந்தார். பின்னர் சந்திப்பு பேருந்து நிலையப் பகுதியில் பேக்கரி கடை முன்பு பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது தனது கையில் வைத்திருந்த பையை பார்த்த போது அதன் கீழ் பகுதி கிழிக்கப்பட்டு பணம் திருடு போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து தில்லைநாயகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு இளம் பெண் முதியவரின் கையில் இருந்த கைப்பையை பிளேடால் கிழித்து 30 ஆயிரம் ரூபாய் பணம், வங்கி புத்தகம் ஆகியவற்றை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையிள் அந்த இளம்பெண் தச்சநல்லூரைச் சேர்ந்த பூமிகா என்பதும் அவர் நர்சிங் முடித்திருப்பதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.