திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு அருகில் இருக்கும் ஆற்றுப்பகுதியில் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த முதியவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், சடலமாக கிடந்த முதியவர் விக்கிரமசிங்கபுரம் காந்திபுரம் பகுதியில் வசித்த சுடலை மாடன் என்பது தெரியவந்தது. இவர் அடிக்கடி வெளியூர் சென்று விட்டு 4 நாட்கள் கழித்து வீட்டிற்கு வருவது வழக்கம். அதுபோல வெளியூர் தான் சென்றிருப்பார் என குடும்பத்தினர் நினைத்தனர். ஆனால் சுடலை மாடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.