சேலம் மாவட்டத்தில் உள்ள நரசிம்மன் செட்டி ரோடு பகுதியில் இருக்கும் தனியார் மில்லில் பீகார் மாநிலத்தை சேர்ந்த தவ்ராஜ் அன்சாரி என்பவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து அன்சாரி தங்குமிடத்திற்கு திரும்பி வரவில்லை. இதனால் அவருடன் வேலை பார்ப்பவர்கள் அன்சாரியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது நரசிம்மன் செட்டி ரோட்டில் ரயில்வேக்கு சொந்தமான காலி இடத்தில் முட்புதரில் மர்மமான முறையில் தப்ராஜ் அன்சாரி இறந்து கிடந்தது தெரியவந்தது.

அவரது உடலுக்கு அருகே மது பாட்டில் கிடந்தது. அவரது தலை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் ரத்த காயம் இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அன்சாரியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறு அன்சாரி கொலை செய்யப்பட்டாரா? அல்லது போதையில் தவறி விழுந்து உயிரிழந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.