சேலம் மாவட்டத்தில் உள்ள விநாயகபுரம் அணைமேடு அருகே தென்னங்குடிபாளையம் செல்லும் வழியில் விவசாய கிணறு அமைந்துள்ளது. இந்த கிணற்றில் வாலிபர் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்களும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் கண்ணாடிமில் பகுதியைச் சேர்ந்த சூர்யா(21) என்பது தெரியவந்தது. இவர் ஸ்டூடியோவில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை சூர்யாவின் நண்பர் முருகனுக்கு பிறந்தநாள்.

எனவே சக நண்பர்கள் 10 பேருடன் அவர் தென்னங்குடிபாளையம் பகுதிக்கு சென்று கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இதனையடுத்து அங்குள்ள கிணற்றில் சூர்யா குளித்துக் கொண்டிருந்தபோது உரிமையாளர் சத்தம் போட்டதால் அனைவரும் அங்கிருந்து சென்றனர். இதனைத் தொடர்ந்து மாலை நேரம் சூர்யா கிணற்று பகுதிக்கு வந்துள்ளார்.

இதுகுறித்து உரிமையாளர் கேட்டபோது மோட்டார் சைக்கிள் சாவி தொலைந்து விட்டதாகவும், அதனை தேடி வந்ததாகவும் சூர்யா தெரிவித்தார். இதனால் கிணற்றின் உரிமையாளர் அங்கிருந்து சென்று விட்டார். அதன் பிறகு சூர்யா தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.