கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு மற்றும் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகளுடன் சந்திப்பு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு கும்பகோணம் துணை போலீஸ் குமார் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு தலைவர் சோலா மகேந்திரன் மற்றும் செயலாளர் சத்யநாராயணன் போன்றோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்நிலையில் கும்பகோணத்தில் இரவு நேரத்தில் கடைகள் இயங்கும் நேரம் குறைக்கப்பட்டு இருப்பதால் வியாபாரம் பாதிக்கப்படுகிறது.

அதனால் இரவு 11:30 மணி வரை கடைகள் இயங்க அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கும்பகோணம்  துணை போலிஸ்  சூப்பிரண்டு மகேஷ் குமார் கூறியதாவது, வியாபாரிகளின் நியாயமான பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அதற்கு தீர்வு காணப்படும். அதே சமயம் இரவு நேரத்தில் கடைகள் இயங்கும் நேரம் குறைக்கப்பட்டு இருப்பதால் தான் கடந்த சில நாட்களாக கும்பகோணம் மாநகர பகுதியில் குற்றங்கள் குறைந்துள்ளது. மேலும் குடந்தை மாநகரத்தில் அமைதி நிலவ வேண்டும் என்ற காரணத்தினால் நேரத்தை குறைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் வணிகர்களின் கோரிக்கையை ஏற்று இரவு 11:30 மணிக்குள் அனைத்து கடைகளையும் கட்டாயம் மூட வேண்டும். அதற்கு மேல் ஒரு நிமிடம் கூட கடைகள் இயங்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.