விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாரநேரி ஈஸ்வரன் காலனியில் பாண்டீஸ்வரன்(28) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பஞ்சவர்ணம்(24) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு காவியா என்ற மகளும், சித்தார்த், அரவிந்த் என்ற மகான்களும் இருக்கின்றனர். கணவன் மனைவி இருவரும் அப்பகுதியில் இருக்கும் பட்டாசு ஆலையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர். கடந்த மாதம் 23-ஆம் தேதி பஞ்சவர்ணத்திற்கு 4-வதாக பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் கணவன், மனைவி இருவரும் குடும்ப வறுமை காரணமாக குழந்தையை விற்பனை செய்ய முடிவு எடுத்தனர். இதனை அறிந்த மாரநேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக வேலை பார்க்கும் அஜிதா என்பவர் தனக்கு தெரிந்த ஒருவர் நாகர்கோவிலில் இருப்பதாகவும், அவரிடம் குழந்தையை கொடுத்தால் தேவையான பணம் கொடுப்பார் எனவும் கூறியுள்ளார். அதன்படி கணவன், மனைவி இருவரும் வங்கி அதிகாரியான ஜார்ஜ், அவரது மனைவி ஐரின் ஆகியோரிடம் 40 ஆயிரம் ரூபாயை வாங்கி கொண்டு குழந்தையை கொடுத்துள்ளனர்.

இதனை அறிந்த பஞ்சவர்ணத்தின் தாய் மாரியம்மாள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ஜானகி நேரில் சென்று விசாரித்த போது கணவன், மனைவி இருவரும் பணத்திற்காக குழந்தையை விற்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் பஞ்சவர்ணம், பாண்டீஸ்வரன், ஐரின், ஜார்ஜ், அஜிதா, முத்து மாரி ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.