விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டையில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு பெருமாள் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பெருமாளை கைது செய்தனர்.

இந்த வழக்கினை விசாரித்த விருதுநகர் மாவட்ட போக்சோ நீதிமன்றம் பெருமாளுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.