திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மப்பேடு கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் இருக்கும் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் குடிநீருடன் கலந்து மாசுபட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் தொற்றால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் கோபமடைந்த கிராம மக்கள் அரக்கோணம்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மப்பேடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.