ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் குருநாதசாமி கோவிலில் ஆடி தேர்த்திருவிழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தென்னிந்தியாவின் புகழ் பெற்ற குதிரை சந்தையான அந்தியூர் குதிரை சந்தை நேற்று முன் தினம் தொடங்கியது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 3000 மேற்பட்ட குதிரைகள் விற்பனைக்காகவும், கண்காட்சிக்காகவும் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி எம்.எஸ்.ஆர்.ஐ குதிரை பண்ணை நடத்தி வரும் ஸ்ரீ நிவாஸ் என்பவர் 65 அங்குல உயரம் உள்ள பஞ்ச கல்யாணி கருப்பு நிற சாகர் என பெயரிடப்பட்ட மார்வார் இன குதிரையை விற்பனைக்காக கொண்டு வந்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற குதிரை கண்காட்சியில் இந்த குதிரை 10-க்கும் மேற்பட்ட பரிசுகளை வென்றிருக்கிறது. இதன் பிறப்பு, அம்சம், காது, நிறம், உயரம் ஆகியவற்றை வைத்து அந்த பரிசுகள் வழங்கப்பட்டது.

சுமார் 3 கோடி ரூபாய் வரை அந்த குதிரையை விலை பேசினேன். ஒரு சிலர் 2 கோடி முதல் 2 1/2 கோடி ரூபாய் வரை கேட்டனர். இந்த குதிரை மட்டுமில்லாமல் எனது பண்ணையில் ஒன்பது குதிரைகளை வளர்த்து வருகிறேன். ஏற்கனவே 5 லட்சம் முதல் 4 கோடி ரூபாய் வரை குதிரைகளை விற்பனை செய்துள்ளேன். காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் குதிரைக்கு சவாரி பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனையடுத்து குதிரைக்கு தேவையான கால்சியம் சத்துக் கொண்ட உணவு வகைகளை கால்நடை மருத்துவர் உதவியுடன் அளித்து பராமரித்து வருகிறேன். சந்தைக்கு வரும் ஏராளமான பொதுமக்கள் இந்த குதிரையை ஆர்வமுடன் பார்த்து செல்பி எடுத்து செல்கின்றனர் என கூறினார்.