இந்தியா உட்பட பல நாடுகளை சேர்ந்த மக்கள், தங்கள் குடும்பத்தினரின் திருமண நிகழ்வுகளை துபாயில் நடத்துவதற்கு விருப்பம் தெரிவிப்பதாக ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

வர்த்தகம், சுற்றுலா உட்பட பல நிகழ்வுகளுக்கு முக்கிய நகராக துபாய் விளங்குகிறது. அங்கு இலங்கை, வங்காளதேசம், பாகிஸ்தான், இங்கிலாந்து, இந்தியா உட்பட 200 நாடுகளை சேர்ந்த மக்கள் வாழ்கிறார்கள். பல நாடுகளை சேர்ந்த மக்கள் வாழ்ந்தாலும், அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இதனால், இந்தியா உட்பட உலகின் பல நாடுகளை சேர்த்த மக்கள் தங்கள் குடும்ப நிகழ்வுகளை துபாயில் நடத்துவதற்கு ஆர்வமாக இருக்கிறார்கள். திருமணம் மட்டுமல்லாமல் மற்ற நிகழ்வுகளையும் அந்நகரில் நடத்த மக்கள் விரும்புகிறார்கள். துபாய் நகரானது உலகிலேயே பொதுமக்கள், திருமண நிகழ்வுகளை நடத்துவதற்கு விரும்பக்கூடிய ஐந்தாம் நகரம் என்று தெரிய வந்திருக்கிறது.

மேலும், திருமண நிகழ்வுகளை புகைப்படம், வீடியோ எடுப்பதற்கு வசதிகள் சிறப்பான தொழில்நுட்பத்துடன் இருக்கிறது. திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வோருக்கு அவரவர் விரும்பும் விதத்தில் உணவுகளை ஏற்பாடு செய்யவும் வசதிகளும் இருக்கிறது. எனவே, எந்த வயதை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கு ஏற்ற வகையில் உணவு பொருட்கள் கிடைப்பதால் பலரும் விரும்பும் நகரமாக துபாய் அமைந்திருக்கிறது.