அரியலூர் மாவட்டத்தில் உள்ள பாப்பாங்குளம் கிராமத்தில் கார்த்திக்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி. நேற்று கழுவந்தோண்டி கிராமத்தில் கட்டிடம் ஒன்றில் கார்த்திக் வெள்ளை அடிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது கட்டிடத்தின் மேற்பகுதியில் சுவரை உரசியவாறு சென்ற மின் கம்பி, கார்த்தி மீது உரசியதால் மின்சாரம் பாய்ந்து அவர் தூக்கி வீசப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் கார்த்திக்கை  மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, மின்கம்பிகள் வீடுகளின் குறுக்கே தொடும் தூரத்தில் இருக்கிறது. மேலும் மின்கம்பிகள் உரசி தீப்பொறி ஏற்படுகிறது. சில நேரங்களில் மின்கம்பிகள் உரசி தீப்பொறி ஏற்பட்டதில் வைக்கோல் போர் உள்ளிட்டவை எரிந்து நாசமாகியுள்ளது. எனவே ஆபத்தான நிலையில் உள்ள இந்த மின் கம்பிகள் மற்றும் கம்பங்களை இடம் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தனர்.