மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலத்தில் முன்னாள் ராணுவ வீரரான குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நாகேஸ்வரிக்கும் (23) முன்னாள் ராணுவ வீரரான ராஜவேலுவின் மகன் உதயசங்கருக்கும் (28) கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது 30 பவுன் நகையுடன், சீர்வரிசையும் வழங்கப்பட்டது. இந்நிலையில் திருமணமான சில மாதங்களில் கூடுதல் நகை, பணம் கேட்டு கர்ப்பிணியாக இருந்த நாகேஸ்வரியை  கணவர் வீட்டார் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

பின்னர் நாகேஸ்வரியை தாய் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். இதுகுறித்து நாகேஸ்வரி திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் கணவருடன் சேர்த்து வைக்கும்படி புகார் அளித்தார். அதன் படிபோலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனையடுத்து நாகேஸ்வரி அளித்த புகாரின் பேரில் உதயசங்கர், மாமனார் ராஜவேலு, மாமியார் மீனா, சகோதரர் ரகு ஆகியோர் மீது மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.