மலேசியாவில் பிச்சைக்காரன்-2 படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி கலந்துகொண்டு நடித்தபோது விபத்து ஏற்பட்டு பலத்த காயமடைந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அங்கு உள்ள லங்கா தீவில் கடலில் படகை விஜய் ஆண்டனி வேகமாக ஓட்டி சென்ற போது மற்றொரு படகில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் விஜய் ஆண்டனிக்கு முகத்தில் படு காயம் ஏற்பட்டது. மேலும் சுய நினைவிழந்து தண்ணீருக்குள் மூழ்கபோன விஜய் ஆண்டனியை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவரது உடல்நிலை தேறி உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் விஜய் ஆண்டனிக்கு வாய்ப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

அதன்படி சென்னை சென்று அறுவை சிகிச்சை செய்துக்கொள்வதாக விஜய் ஆண்டனி தெரிவித்து உள்ளார். அதனை தொடர்ந்து விஜய் ஆண்டனி இன்று (ஜன,.18) லங்கா தீவிலிருந்து விமானத்தில் கோலாலம்பூர் சென்று அங்கிருந்து இரவு சென்னை திரும்ப இருக்கிறார். சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் விஜய் ஆண்டனி அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.