ராஜஸ்தான் மாநிலத்தில் பணம் கொடுத்து சிறுமியை விலைக்கு வாங்கி பாலியல் தொல்லை கொடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்த்த சிறுமி, பெற்றோர், 2 சகோதரிகள் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இதில் சிறுமியின் மூத்த சகோதரிக்கு  திருமணம் நடைபெற்ற நிலையில், இளைய சகோதரி மாற்றுத்திறனாளி என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சிறுமியின் பாட்டிக்கும், அவர்கள் வீடு இருக்கும் பகுதியில் காய்கறி விற்கும் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது 13 வயது சிறுமிக்கு கல்யாணம் செய்து வைப்பதாகவும், திருமண செலவுகள் இன்றி பணம் பெற்றுத் தருவதாகவும் பாட்டியிடம் காய்கறி விற்கும் பெண் ஆசை வார்த்தைகளை கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து பண ஆசையில் சிறுமியுடன் ராஜஸ்தான் ஜெய்ப்பூருக்கு பாட்டி சென்று உள்ளார். அங்கு ஒரு பெண்ணை அறிமுகப்படுத்திய காய்கறி விற்கும் பெண், அவர்களது பொறுப்பில் சிறுமியை விட்டு விட்டு ரூ.55,000 பணம் பெற்றுத் தந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் ஜெய்ப்பூரில் முன் பின் அறிமுகமில்லாத இடத்தில் கைவிடப்பட்ட சிறுமியிடம், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறிய அந்த வீட்டு இளைஞர் தொடர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

அதேபோல் வேறொரு ஊரை சேர்ந்த பெண்ணும் விலைக்கு வாங்கப்பட்டு சிறுமி போன்று பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையில் வீட்டைவிட்டு தப்பிய சிறுமி தனக்கு நடந்த கொடூர சம்பவம் குறித்து போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விகாஸ் என்ற இளைஞரை கைது செய்தனர். அதோடு வழக்கு தொடர்பாக சிறுமியின் பாட்டி உள்ளிட்டோரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..