தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம் வ.உ.சி விளையாட்டுக் கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ஓட்டப்பிடாரம் வ.உ.சிதம்பரனார் விளையாட்டுக் கழகத்தின் 35-ஆம் ஆண்டு விழா மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான மினி மாராத்தான் போட்டி நடைபெற உள்ளது. இந்நிகழ்வு ஓட்டப்பிடாரம் வ.உ.சிதம்பரனார் அரசு மேல்நிலைப்பள்ளியில் வருகிற 11-ஆம் தேதி நடக்கிறது. இந்த போட்டியில் மாணவர்களுக்கு 10 கி.மீ துாரம் மற்றும் மாணவிகளுக்கு 5 கி.மீ துாரம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடிக்கும் பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு வெள்ளி பரிசு பொருட்கள் வழங்கப்படும்.

இதேபோல் 4-ஆம் இடம் முதல் 10-ஆம் இடம் வரை பிடிக்கும் மாணவ,மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்படுகிறது. மேலும் இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ-மாணவியர்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியர்  கையெழுத்திட்ட  கடிதத்தை பெற வேண்டும். இதனையடுத்து கடிதத்தை வ.உ.சிதம்பரனார் விளையாட்டுக் கழக இணை செயலாளர், ஓட்டப்பிடாரம் என்ற முகவரியில் வருகிற 7-தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.