இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தற்போது ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குஜராத் அணி ஹைதராபாத் அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. குஜராத் அணி இதுவரை 9 வெற்றிகள் பெற்ற நிலையில் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறியுள்ளது. இந்த வெற்றி குறித்து குஜராத் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்டியா கூறுகையில், எங்கள் வீரர்களின் செயல்பாடுகளை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்.

2-வது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சவாலான நேரங்களில் கூட வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கு வழி வகுத்தனர். பவுலர்கள் என்னுடைய இதயத்துக்கு மிகவும் நெருக்கமானவர்கள். ஆனால் சில நேரங்களில் வெற்றி பெரும்போது பேட்ஸ்மேன்களுக்கு தான் நிறைய பாராட்டுகள் சேருகிறது. நான் எப்போதுமே பவுலர்களின் கேப்டன். இதனால் வெற்றியில் பவுலர்களுக்கும் உரிய பங்கு கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கு அவர்கள் தகுதி படைத்தவர்கள் என்று கூறினார்.