ஐதாரபாத்திலுள்ள பிலிம் நகர் பகுதியில் இருக்கும் முகமது சிராஜ் புது வீட்டிற்கு விராட் கோலி உட்பட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர்கள் சென்று உள்ளனர். IPL கிரிக்கெட் திருவிழா மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் பிளே ஆப் சுற்றுக்காக போராடி வருகிறது. இதனிடையே குஜராத் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு சென்று உள்ளது.

சென்ற சீசனிலும் குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 12 போட்டிகளில் விளையாடி இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 12 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. இன்னும் 2 போட்டிகள் இருக்கும் சூழலில், இரண்டிலும் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப் பந்து வீச்சாளர் சிராஜ் 12 போட்டிகளில் விளையாடி 42 ஓவர்கள் வீசி 327 ரன்கள் கொடுத்து 16 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார். இதில் ஒரே ஒருமுறை மட்டும் 4 விக்கெட்டுகள் கைப்பற்றி உள்ளார். இதுவரை 77 IPL போட்டிகளில் விளையாடி உள்ள முகமது சிராஜ் இப்போது வரை 78 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

இந்நிலையில் ஐதராபாத்தில் பிறந்த சிராஜ், ஐதராபாத்திலுள்ள பிலிம் நகர் பகுதியில் புதியதாக வீடு ஒன்றை வாங்கி உள்ளார். அந்த வீட்டின் திறப்பு விழாவுக்கு விராட் கோலி உட்பட மற்ற ஆர்சிபி வீரர்கள் அணிவகுத்து சென்று உள்ளனர். அப்போது எடுத்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.