தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நாஞ்சிக்கோட்டை விக்டோரியா காலனியில் சுந்தர் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக வேலை இல்லாமல் சுந்தர் வீட்டில் இருந்தார். இவருக்கு நித்யா என்ற மனைவி உள்ளார். இவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் மண்டல அலுவலகத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய வீட்டை விற்பது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் சுந்தர் தனது மனைவியை அரிவாளால் வெட்டியுள்ளார். மேலும் பரிசுத்தம் நகரில் பால் விற்பனை மையம் நடத்தி வரும் தாமரைச்செல்வன், கோபி ஆகியோரையும் சுந்தர் அரிவாளால் வெட்டிவிட்டு காரில் தப்பி சென்றார். இதற்கிடையே படுகாயமடைந்த மூன்று பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது சுந்தர் சென்ற காரின் மீது அந்த வழியாக வந்த லாரி மோதியது. இதனால் படுகாயமடைந்த சுந்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.