விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி பகுதியில் முத்துராசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டிற்கு அருகே ஆட்டு கொட்டகை அமைப்பதற்காக சிவக்குமார் என்பவரை வரவழைத்து வெல்டிங் வைத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக முத்துராசு மீது மின்சாரம் பாய்ந்தது. அவரை காப்பாற்ற முயற்சி செய்த சிவக்குமார், முனீஸ்வரி, ஜெயகிருஷ்ணன், பெருமாள் ஆகிய நான்கு பேர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

இதில் படுகாயமடைந்த முத்துராசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் முத்து ராசுவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.