கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊர் ஊராக சென்று பலூன் மற்றும் பொம்மை வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலமுருகன் பண்ருட்டியில் இருக்கும் உறவினர் வீட்டில் தங்கி இருந்து வியாபாரத்திற்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் பாலமுருகன் ஆசை வார்த்தைகள் கூறி அதே பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமியை கடத்தி சென்றதாக தெரிகிறது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் தேடுவதை அறிந்த பாலமுருகன் சிறுமியை உளுந்தூர்பேட்டை அருகே விட்டு விட்டு தலைமறைவாகிவிட்டார். இதனை அறிந்த போலீசார் உளுந்தூர்பேட்டைக்கு சென்று சிறுமியை மீட்டு விசாரித்த போது பாலமுருகன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. நேற்று முன்தினம் தலைமறைவாக இருந்த பாலமுருகனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.