சீனாவின் செங்டூ நகரில், சியோமியின் SU7 மின்சார கார் ஒன்று திடீர் விபத்தில் சிக்கி தீப்பந்தமாக மாறியது. இதில் ஓட்டுநர் வெளியேற முடியாமல் உள்ளே சிக்கி உயிரிழந்த சோக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திங்கள்கிழமை நடந்த இந்த விபத்தில், கார் மற்றொரு வாகனத்துடன் மோதியதும் உடனடியாக தீப்பிடித்து எழுந்தது.

தீயின் கொடூரத்தால் காரின் கதவுகள் பூட்டப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அருகில் இருந்தவர்கள் கதவை திறக்க முயன்றும் தவறிவிட்டனர். 31 வயது டெங் என்ற ஓட்டுநர் இந்த விபத்தில் உயிரிழந்தார். இச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைரல் வீடியோவுக்குப் பிறகு, சியோமி நிறுவனத்தின் பங்குகள் 8.7 சதவீதம் குறைந்து, ஏப்ரல் முதல் நடந்த மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளன. நிறுவனம் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

போலீசார் ஓட்டுநர் மது அருந்தியிருந்ததாக சந்தேகம் கொண்டுள்ளனர். காரின் கதவுகள் திறக்கப்படாத காரணமும், மின்சாரக் கோளாறும் உள்ளிட்டவற்றை ஆழமாக விசாரித்து வருகின்றனர். இத்தகைய மின்சார வாகனங்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை இச்சம்பவம் எழுப்பியுள்ளது.