காவலர் பணி மிகவும் கடுமையான வேலைகளில் ஒன்றாகும். இந்த பணியில் இருக்கும் காவலர்களின் பெரும் குறை என்னவென்றால் குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியாது. மற்றவர்கள் போல் உறவினர்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாது. அதிலும் குறிப்பாக எளிதில் விடுமுறை கிடைக்காது. இப்படி பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் காவலர்கள் தங்களது பணியை கவனித்து வருகின்றனர். சில சமயங்களில் பணிச்சுமை போன்ற காரணங்களினால் காவலர்கள் விபரீத முடிவுகளை எடுக்கும் அளவிற்கு தள்ளப்படுகின்றனர். இதுபோன்ற நிகழ்வுகளை குறைப்பதற்காக அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதாவது குறிப்பிட்ட நேரம் வேலை, விருப்ப விடுமுறை, வார விடுமுறை போன்ற பல்வேறு சலுகைகள் காவலர்களுக்கு வழங்கப்படுகிறது. இருப்பினும் இந்த நடைமுறைகள் அனைத்தும் அனைத்து நேரங்களிலும் மேற்கொள்ளப்படுகிறதா என கேட்டால் அது சந்தேகம் தான். அந்த வகையில் தற்போது காவலர் ஒருவர் மனைவியுடன் ஹோலி பண்டிகைகளுக்கு செல்ல தன் உயரதிகாரியிடம் விடுமுறை கேட்ட நிகழ்வு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பரூக்காபாத்தை சேர்ந்த காவல் ஆய்வாளர் ஒருவர் விடுமுறை வேண்டி தன்னுடைய உயர் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, எனக்கும் எனது மனைவிக்கும் திருமணமாகி 22 ஆண்டுகள் ஆகிறது.

இதில் எனது  மனைவி திருமணமான முதல் இருந்து 22 ஆண்டுகள் வரை அவரது  குடும்பத்தினருடன் ஹோலி பண்டிகையை கொண்டாடவில்லை. இந்த ஆண்டு ஹோலி பண்டிகை தன் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் அவரது சொந்த ஊரில் கொண்டாட விரும்புகிறார். அதனால் ஹோலி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வதற்கு விடுமுறை எடுக்க  கோரி தன்னிடம் தொடர்ந்து சண்டையிட்டு வருகிறார். இதன் காரணமாக தன்னால் சரிவர பணி செய்ய இயலவில்லை எனக் கூறியுள்ளார். மேலும் ஹோலி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வதற்கு பத்து நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தை பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் மீனா சிரித்திருக்கிறார். மேலும் அவருக்கு ஐந்து நாட்கள் விடுமுறையில் சொந்த ஊர் செல்ல அனுமதி அளித்துள்ளார். இந்நிலையில் காவல் ஆய்வாளரின் இந்த விடுமுறை கடிதம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.