தமிழ் சினிமாவில் எவர்கிரீன் மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பிதாமகன், லவ்லி, கஜேந்திரா, என்னம்மா கண்ணு, விவரமான ஆளு, லூட்டி போன்ற பல படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ.துரை. இவர் தயாரித்த சில படங்கள் பெரும் தோல்வியை சந்தித்ததால் தன்னுடைய சொத்துக்கள் மொத்தத்தையும் இழந்து குடும்பத்தினரால் கைவிடப்பட்டுள்ளார். இவர் தற்போது சாலிகிராமத்தில் உள்ள அவருடைய நண்பர் வீட்டில் வசித்து வரும் நிலையில் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருகிறார்.

இவருடைய காலில் எலும்புகள் தெரியும் அளவுக்கு புண்கள் இருக்கிறது. இவர் தற்போது மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்து வரும் நிலையில் தன்னை பராமரித்துக் கொள்ளவும் ஆளில்லாமல் இருக்கிறார். இதனால் தனக்கு யாராவது உதவி செய்யுங்கள் என்று ‌ கூறி  தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் நடிகர் சூர்யா வி.ஏ.துரைக்கு 2 லட்ச ரூபாய் பண உதவி செய்துள்ளார். மேலும் வி.ஏ துரை ரஜினி தன்னுடைய 40 வருட நண்பர் என்றும், தன்னுடைய நிலைமையை அவரிடம் எடுத்துக் கூற வேண்டும் எனவும், தயாரிப்பாளர்கள் சங்கமும் திரைத்துறையினரும் உதவ முன் வர வேண்டும் எனவும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.