கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொட்டிபாளையம் பிரிவு டாட்டா நகரில் ரமேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் செருப்பு விற்பனை கடை மற்றும் ஆன்லைன் மூலம் பணம் டிரான்ஸ்பர் செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹேமந்த்(35) என்பவர் ரமேஷ் குமாரின் கடைக்கு சென்று 1,300 ரூபாய் மதிப்புள்ள செருப்புகளை வாங்கியதோடு, தனது சகோதரரின் வங்கி கணக்கிருக்கு 20,000 ரூபாய் செலுத்துமாறு கூறியுள்ளார்.

இதனை நம்பி ரமேஷ் குமார் அவர் கொடுத்த வங்கி கணக்கில் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி வைத்துவிட்டு, ஹேமந்திடம் பணம் கேட்டுள்ளார். அப்போது ஹேமந்த் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்து பாக்கெட்டில் இருந்த பேனா மற்றும் கத்தியை எடுத்து ரமேஷ் குமாரின் காதில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதில் காயமடைந்த ரமேஷ்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.