திருச்சி மாவட்டத்தில் உள்ள விஸ்வாம்பாள் சமுத்திரம் காலனி பகுதியில் புகழேந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுஜாதா என்ற மனைவியுள்ளார். இந்த தம்பதியினருக்கு சுரேந்தர்(23) என்ற மகனும், வரலட்சுமி என்ற மகளும் இருக்கின்றனர். மெக்கானிக்கல் படித்து முடித்த சுரேந்தர் வேலை தேடி வந்தார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான புகழேந்தி அடிக்கடி குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். நேற்று முன்தினம் சுஜாதாவுக்கும், புகழேந்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அவர்களை சுரேந்தர் சமரசம் செய்ய முயன்றார்.

அப்போது புகழேந்திக்கும், சுரேந்தருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. இதில் கோபமடைந்த சுரேந்தர் தனது தந்தையின் தலையில் குழவி கல்லை போட்டார். இதனால் புகழேந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று புகழேந்தியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.