ஆர். எஸ் பாரதி அவர்கள் தொடர்ந்த வழக்கில் ஜூலை 18ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் மிக முக்கியமான ஒரு உத்தரவை தீர்ப்பாக வழங்கியிருந்தார்கள்.

கடந்த 2018 ஆம் ஆண்டு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.  அதிமுக ஆட்சி காலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  அவரது கட்டுப்பாட்டில் இருந்து நெடுஞ்சாலைத்துறையில் 4,800 கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலை டெண்டர் விடப்பட்டது. அதில் பல்வேறு முறைகேடுகள் செய்து,  அவருக்கு நெருக்கமானவர்கள், அவரது பினாமிகள் ஆகியோருக்கு டென்டரை விட்டு,  அதன் மூலமாக 4800 கோடி அளவிற்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டது.

இதனை சிறப்பு விசாரணை குழு மூலமாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  கோரிக்கை வைத்திருந்தார்.  2018 ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றி இருந்தார்கள். அதனை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அப்போது உச்ச நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து,  சிபிஐ விசாரணை எல்லாம் இதற்கு தேவையில்லை.  இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றமே விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருந்தார்கள்.

அதன்பிறகு சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் இந்த வழக்கை முதலில் இருந்து விசாரித்தார்கள்.  லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்திருந்த அறிக்கை உள்ளிட்டவை எல்லாம் ஆய்வு செய்யப்பட்டது. அதற்கு பிறகு தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம்,  இந்த விவகாரத்தில் புதிதாக ஏதும் விசாரிக்கப்பட வேண்டியதில்லை. ஆரம்பகட்ட விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை சரியாகத்தான் செய்திருக்கிறார்கள். அதில் தவறு ஏதுமில்லை. எனவே ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்ற காரணத்திற்காக எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான வழக்கில் மீண்டும் விசாரிக்க தேவையில்லை என்று கூறி ஆர்.எஸ் பாரதி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்திருந்தார்கள்.

இது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறைக்கும் ஒரு பின்னடைவான விஷயமாக பார்க்கப்பட்டது. எனவே இந்த விவகாரத்தில் தற்பொழுது லஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கின்றது. ஏற்கனவே இந்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கேவியட் மனுவை தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வழக்கை முழுமையாக முடித்து வைத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.  வழக்கை தொடர்ந்து நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அவர்கள்  வைத்துள்ளார்கள்.