காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பூந்தண்டலம் பகுதியில் எலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சாலையோரம் தனது காரை நிறுத்திவிட்டு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் எலனிடம் ஏன் இங்கு காரை நிறுத்தி இருக்கிறீர்கள் என கேட்டதால் இருவரும் பதற்றமடைந்தனர். அதனை பயன்படுத்தி மர்ம நபர் தன்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் என கூறியதோடு, விசாரிக்க வேண்டும் என கூறி எலன் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலி, ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கி கொண்டார்.

பின்னர் சோமங்கலம் காவல் நிலையத்திற்கு வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என கூறிவிட்டு மர்ம  நபர் அங்கிருந்து சென்றார். இதனால் இருவரும் சோமங்கலம் காவல் நிலையத்திற்கு சென்றனர். அங்கு சென்று விசாரித்தபோது தான் போலீஸ் எனக்கூறி நகை மற்றும் பணத்தை பறித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.