சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூரை தலைமை இடமாகக் கொண்டு தனியார் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனத்தை ஏசுதாஸ் என்பவர் நடத்தி வந்தார். மேலும் கிரிஜா என்பவர் மக்கள் தொடர்பு அலுவலராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் தமிழகம் முழுவதும் கிளைகளை தொடங்கி சுய உதவி குழுக்களுக்கு கடன் பெற்று தருவதாக அறிவித்தனர்.

அதன்படி திண்டுக்கல் கிளை நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர்கள் கள பணியாற்றி மகளிர் சுய உதவி குழுவினரிடம் கடன் பெற்று தருவதாக கூறியுள்ளனர். மேலும் முன்பணமாக 6 கோடி ரூபாய் வரை வசூலித்து தொண்டு நிறுவனத்தில் உரிமையாளர் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் ஆகியோரின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பியுள்ளனர்.

ஆனால் கூறியபடி அவர்கள் கடன் வாங்கி தராமல் மோசடி செய்தனர். இதுகுறித்து திண்டுக்கல் கிளை ஊழியர்கள் திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் ஏசுதாஸ், கிரிஜா ஆகியோர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.