இந்தியாவில் சமீபத்தில் துவங்கப்பட்ட வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு புறப்பட்டு சென்றது. முர்ஷிதாபாத் மாவட்டம் பராக்கா பகுதியில் சென்றபோது மர்ம நபர்கள் ரயில் மீது திடீரென கற்களை சரமாரியாக வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் ரயில் ஜன்னல் கண்ணாடி சேதமடைந்து உள்ளது.

எனினும் இந்த கல்வீச்சு தாக்குதலில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது. மேற்கு வங்காளத்தில் வந்தே பாரத் ரயில் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். வந்தே பாரத் ரயிலை குறிவைத்து தாக்கும் சம்பவம் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று கிழக்கு ரயில்வே சிபிஆர்ஓ கவுசிக் மித்ரா கூறினார்.