மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது கட்ட கூட்டத்தொடர் மார்ச் 13ல் தொடங்கி ஏப்.6 வரை நடக்கயிருக்கிறது. முதல் கூட்டத் தொடர் முடிந்து ஒரு மாத இடைவெளிக்கு பிறகு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த மார்ச் 13 கூடியது. அப்போது லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து பேசிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவும், அதானி விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகளும் முழக்கங்களை எழுப்பின. தொடர் கோஷத்தால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் 4ஆம் நாள் அமர்வு இன்று நடக்கிறது. இது குறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் அவர்கள் சதி செய்கிறார்கள். இதற்கு முன் பல முறை வெளிநாடுகளில் இந்தியாவுக்கு எதிராக மோடி பேசியுள்ளார். ராகுல் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என அவர் ஆவேசமாக கூறினார். தொடர் அமளியால் கடந்த 3 நாட்களாக நாடாளுமன்றம் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.