மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் அமைந்துள்ள அன்னபூர்ணா காவல் எல்லைக்குட்பட்ட கேசர்பாக் ரயில்வே பாலம் அருகே, திருட வந்ததாகச் சந்தேகிக்கப்பட்ட இரண்டு இளைஞர்களின் கைகளையும் கால்களையும் சேர்த்து கட்டிவைத்து பொதுமக்கள் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர். வீட்டின் நுழைந்ததாகக் கூறி கூச்சலிட்ட பெண்ணின் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த உள்ளூர் வாசிகள், காவல்துறையினரிடம் ஒப்படைப்பதற்குப் பதிலாகத் தாங்களே சட்டம் ஒழுங்கைக் கையில் எடுத்துக்கொண்டு இந்தத் தண்டனையை வழங்கியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தின் போது தங்களை விட்டுவிடுமாறு அந்த இளைஞர்கள் கதறி அழுது கெஞ்சிய போதிலும், கூட்டத்தில் இருந்தவர்கள் அதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் லத்தி மற்றும் கால்களால் கடுமையாகத் தாக்கியதோடு தப்பியோடிய மற்றொரு கூட்டாளி குறித்தும் விசாரித்துள்ளனர். ரயில்வே தண்டவாளம் அருகே அரங்கேறிய இந்த மனிதநேயமற்ற தாக்குதலின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்ட இந்தூர் காவல்துறை கூடுதல் டிசிபி ராஜேஷ் தண்டோதியா, தாக்கப்பட்டவர்களின் மீது முந்தைய குற்றப் பின்னணிகள் இருப்பினும் பொதுமக்கள் சட்டம் தன் கையில் எடுப்பதை எந்த நிலையிலும் அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட அடையாளம் காணப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, சட்டத்தை மீறியவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
