கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுந்தராபுரம் ராமலிங்க நகரில் ஆனந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிமேகலை(38) என்ற மனைவி உள்ளார். கடந்த ஆண்டு மணிமேகலை நிதி நிறுவன உரிமையாளரான முருகன் என்பவரிடம் 25 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். அதற்கு வட்டியுடன் சேர்த்து மாதம் 7,500 வீதம் மணிமேகலை இதுவரை 45 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார்.

இந்நிலையில் கூடுதலாக வட்டி தருமாறு கேட்டு முருகன் மணிமேகலையை தொந்தரவு செய்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிமேகலை முருகனின் வீட்டிற்கு சென்று எதற்கு இவ்வளவு வட்டி வாங்குகிறீர்கள் என கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த முருகன் மணிமேகலையை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து மணிமேகலை போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் முருகனை கைது செய்தனர்.