சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் பகுதியில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பி.எச்.டி படித்து முடித்துள்ளார். கடத்த 2016- ஆம் ஆண்டு முதல் தினேஷும் எம்.ஏ., பி.எட் பட்டதாரி பெண்ணும் காதலித்து வந்ததாக தெரிகிறது. கடந்த 2021-ஆம் ஆண்டு அந்த பெண் காட்பாடி பகுதியில் இருக்கும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான பயிற்சி மையத்தில் இணைந்து படித்து வந்துள்ளார். அப்போது காட்பாடி பகுதியில் வீடு எடுத்து கணவன் மனைவியாக இருவரும் வாழலாம் என தினேஷ் அந்த பெண்ணிடம் கூறியதாக தெரிகிறது. அதன்படி 2 ஆண்டுகளாக இருவரும் கணவன் மனைவி போல வாழ்ந்து வந்துள்ளனர். தற்போது அந்த பெண் கர்ப்பமாக இருக்கிறார்.

இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண் கூறியதற்கு தினேஷ் கர்ப்பத்தை கலைத்து விடுமாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அந்த பெண் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் பெண்ணின் பெற்றோர் தினேஷின் வீட்டிற்கு சென்று திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளனர். அப்போது தினேஷ் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் தினேஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.