சென்னை அரும்பாக்கத்தில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் பொன்விழா மாநாடு நடைபெற்றது. இதில் அமைச்சர் நாசர் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, உலக மாவீரர்கள் என்று கூறினால் அலெக்ஸாண்டர், நெப்போலியன் என்று சொல்கிறோம். ஆனால் நமக்குத் தெரிந்த மாவீரன் ராஜேந்திர சோழன். அவர் கிழக்காசிய நாடுகள் முழுவதையும் கைப்பற்றினார். அவரிடம் மொத்தம் 5 லட்சம் துருப்புக்கள் இருந்துள்ளனர். சுமார் 1 லட்சம் குதிரைகள் கொண்ட குதிரை படையும் இருந்துள்ளது.
அவர் கிழக்காசிய நாடுகளுக்கு பதிலாக மேற்கு நாடுகளை கைப்பற்றி இருந்தால், நமது இந்தியா, பாகிஸ்தான், கஜகஸ்தானை தன்வசம் கொண்டு வந்திருப்பார். ஆனால் அவர் கிழக்கு பக்கம் சென்றதால் கம்போடியா, மலேசியா, சிங்கப்பூர், சீனாவின் சில பகுதிகள் என்று அனைத்து பகுதிகளையும் கைப்பற்றினார். உலகம் அதிசயம் என்றால் நாம் தாஜ்மஹாலை சொல்கின்றோம். நமது தஞ்சை பெரிய கோயிலும் உலக அதிசயத்தில் ஒன்றுதான். அது உலக அதிசய பட்டியலில் இடம் பிடித்திருக்க வேண்டும், ஆனால் அது இடம்பெறவில்லை. அதற்கான முயற்சியும் நாம் எடுக்கவில்லை, இதற்கு காரணம் நமது தாழ்வு மனப்பான்மை என்று கூறினார்.
