543 தொகுதிகளுக்கான தேர்தல்  எத்தனை கட்டங்களாக நடைபெறும் எனசற்று நேரத்தில் அறிவிக்கப்படுகிறது. 2024 மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பதற்காக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், எஸ்.எஸ் சாந்து உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்து கூட்டாக அறிவித்து வருகின்றனர். அப்போது தலைமை தேர்தல் ஆணையர், மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் மொத்தம் 96.88 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். நாட்டில் 49.72 கோடி ஆண் வாக்காளர்கள், 47.15 கோடி பெண் வாக்காளர்கள், 48,044 மூன்றாம் பாலினத்தவர்கள் வாக்களிக்க உள்ளனர்.

நாட்டில் 18 முதல் 19 வயதில் 1.84 கோடி இளம் வாக்காளர்களும், 20 முதல் 29 வயதில் 19.74 கோடி இளம் வாக்காளர்களும் உள்ளனர்.  1.82 கோடி பேர் முதல் தலைமுறை வாக்காளர்கள், 82 லட்சம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலை விட வரும் நாடாளுமன்ற தேர்தலில் 6 சதவீதம் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்மக்களவைத் தேர்தலுக்காக நாடு முழுவதும் 10.5 லட்சம் வாக்கு சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. தேர்தல் திருவிழாவில் எங்களுடன் சேர்ந்து நீங்களும் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். மிக உயர்ந்த தரத்தில் தேர்தலை நடத்த நான் உறுதியளிக்கிறேன்.1.50 கோடி தேர்தல் பணியாளர்கள் இந்தியா முழுவதும் பணியாற்ற உள்ளனர். 100 வயதை கடந்த 2.18 லட்சம் பேர் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

97 கோடி வாக்காளர்கள், 10.5 லட்சம் வாக்குச் சாவடிகள், 1.5 கோடி வாக்குச் சாவடி அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள், 55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 4 லட்சம் வாகனங்கள் உள்ளன. இந்தியாவின் தேர்தலில் தரமும் தகுதியும் எப்போதும் சிறப்பாக இருக்கும். தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக 800 மாவட்ட ஆட்சியர்களுடன் நேரடியாக பேசியுள்ளேன். மக்களவைத் தேர்தலை நடத்த முழு அளவில் தயாராக உள்ளோம். ஒவ்வொரு தேர்தலும் சவால் நிறைந்தது தான். இந்த ஆண்டில் நடைபெறும் மிக முக்கியமான செய்தியாளர் சந்திப்பு இதுதான்.

நாட்டிற்கு உண்மையான பண்டிகை, ஜனநாயக சூழலை வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். 17வது மக்களவையின் பதவிக்காலம் ஜூன் 16, 2024 அன்று முடிவடைகிறது. ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைகளின் பதவிக்காலமும் ஜூன் 2024 இல் முடிவடைகிறது. ஜம்மு மற்றும் காஷ்மீரில் தேர்தல்கள் நடைபெற உள்ளன.

கடந்த தேர்தலை காட்டிலும் இந்த முறை பறக்கும் படை அதிகம் அமைக்கப்படும். பண விநியோகம், பரிசுப் பொருள் விநியோகத்தை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தேர்தல் பிரச்சார இரைச்சல், மறு தேர்தல் வாய்ப்பை குறைக்கவும், வன்முறை இன்றியும் தேர்தல் நடைபெறுவது உறுதி செய்யப்படும்.

85 வயதுக்கு மேற்பட்டவர்கள் விரும்பும் பட்சத்தில் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் தேர்தல் நடத்த ஏற்பாடு காகித தாள்கள் மிகக் குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படும். குற்ற பின்னணி வேட்பாளர் விவரங்களை நாளிதழ்களில் வெளியிட கட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசி வருகிறார்… தேர்தல் தேதி அறிவிக்கப்படும்..