தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி பேருந்து நிலையம் அருகே மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பந்தல் அமைக்கும் தொழிலாளி. இவருக்கு சீதாலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மாரியப்பனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த 1 1/2 ஆண்டாக சீதாலட்சுமி கணவரை பிரிந்து மருமகள் வீரம்மாளுடன் வசித்து வந்துள்ளார்.

நேற்று சீதாலட்சுமி கோவிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மாரியப்பன் தனது மனைவியை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டி தலை முடியை பிடித்து இழுத்தார். பின்னர் அரிவாளால் தனது மனைவியின் கழுத்தை அறுத்தார். இதனால் ரத்தம் பீறிட்டு சீதாலட்சுமி அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் மாரியப்பன் தப்பி சென்றார்.

இதனையாடுத்து சீதாலட்சுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மாரியப்பனை தேடி அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது தான் மாரியப்பன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவரது உடலை கைப்பற்றி போலீசார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.