திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அணைபுதூர் எருமைகாடு தோட்டம் கணபதி சாமி கம்பவுண்டில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். ராஜேந்திரனும், அவரது மனைவியும் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். இவர்களது ஒரே மகள் கோவையில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மகளை பார்ப்பதற்காக ராஜேந்திரனின் மனைவி கோவைக்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த ராஜேந்திரன் படுத்து தூங்கினார். நேற்று அதிகாலை 5 மணிக்கு ராஜேந்திரன் அலறும் சத்தம் கேட்டது.

இதனை கேட்டு அக்கம்பக்கத்தினர் ராஜேந்திரனின் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அவர் கருகிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்த போது வீட்டுக்கதவை உட்புறமாக பூட்டிக்கொண்டு கியாஸ் சிலிண்டரை பற்ற வைத்து ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவரது கழுத்தில் நைலான் கயிறு சுற்றி இருந்தது. அவரது உடலை கைப்பற்றி போலீசார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.