தென்காசி மாவட்டத்தில் உள்ள அழகப்பபுரம் அம்மன் கோவில் தெருவில் ராமையா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ராஜீவ் காந்தி, திருநெல்வேலியில் இருக்கும் தனியார் ஹோட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மாரிசெல்வி என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் இருக்கின்றனர். நேற்று காலை வழக்கம் போல ராஜீவ் காந்தி வேலைக்கு செல்வதற்காக ஆழ்வார்குறிச்சி ரயில் நிலையத்திற்கு சென்றார்.

அதே நேரம் ரயில் புறப்பட தயாராக இருந்ததால் ராஜீவ் காந்தி ஓடி சென்று ரயிலில் ஏற முயன்றார். அப்போது நிலைதடுமாறி தண்டவாளத்தில் விழுந்த ராஜீவ் காந்தி மீது ரயிலின் சக்கரம் ஏறி இறங்கியது. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த போலீசார் அங்கு சென்று ராஜீவ் காந்தியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.