தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தின் முன் இளையரசனேந்தல் பிர்காவில் வசிக்கின்ற ஏழை, எளிய மக்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் ஜி.பாபு தலைமை தாங்கினார். மேலும் இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் அ.சரோஜா, ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் பி.பரமராஜ், நிர்வாகிகள் என்.குருசாமி, எம்.இன்னாசிமுத்து மற்றும் இளையரசனேந்தல் பிர்காவை சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

இவர்கள் இலவச வீட்டுமனை கேட்டு முழக்கமிட்டனர். இதனை தொடர்ந்து அவர்கள் தாசில்தார் செ.சுசிலாவிடம் கோரிக்கை மனுவை அளித்து விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொண்டனர். உடனே அந்த மனுவை தாசில்தார் பெற்றுக்கொண்டு, கோவில்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் இடத்தை கண்டறிந்து, பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இதனையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.