இந்தியாவில் தெருநாய்களின் அச்சுறுத்தல் குறித்து விவாதங்கள் உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ள நிலையில், ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் நடந்துள்ள ஒரு சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தீரகுலா கிராமத்தில் உள்ள மழலையர் பள்ளி வளாகத்தில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு விஷப்பாம்பு அங்கு நுழைந்துள்ளது.

குழந்தைகளை நோக்கிச் சென்ற அந்தப் பாம்பைக் கண்ட ‘காளி’ என்ற தெருநாய், சற்றும் யோசிக்காமல் குழந்தைகளைக் காக்கப் பாம்புடன் சண்டையிடத் தொடங்கியது. குழந்தைகளை நெருங்க விடாமல் தடுத்து, பாம்புடன் கடுமையாகப் போராடிய காளியை, அந்த விஷப்பாம்பு முகம் மற்றும் வாய் பகுதிகளில் பலமுறை கொத்தியது.

 

உடல் முழுவதும் விஷம் ஏறினாலும், அந்தப் பாம்பைக் கொல்லும் வரை காளி தனது போராட்டத்தை நிறுத்தவில்லை. இறுதியாகப் பாம்பு இறந்த சில நிமிடங்களிலேயே, நாய் காளியும் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தது.

தனது உயிரைக் கொடுத்து 30 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய அந்தத் தெருநாய்க்கு, ஒட்டுமொத்த கிராமமே திரண்டு வந்து கண்ணீர் மல்க இறுதிச் சடங்குகளைச் செய்தது. தெருநாய்கள் வெறும் அச்சுறுத்தல் மட்டுமல்ல, அவை உண்மையான பாதுகாவலர்கள் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உலகுக்கு உணர்த்தியுள்ளது.