புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடசேரிபட்டி பகுதியில் பிடாரி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 700 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான சின்ன கொம்பன் காளை கலந்து கொண்டுள்ளது.

இந்த காளை மாட்டை வாடி வாசலில் இருந்து அவிழ்த்து விடும்போது அருகே இருந்த கட்டையில் மோதியது. இதில் காயம் அடைந்த காளை மாடு சம்பவ இடத்திலேயே மயக்கமாகி சுருண்டு விழுந்தது. உடனே காளை மாட்டை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக நடைபெற்ற ஒரு ஜல்லிக்கட்டு போட்டியின் போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான பெரிய கொம்பன் காளை வாடிவாசல் கட்டையில் மோதி உயிரிழந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.