காஞ்சிபுரம் மாவட்டத்தில் திமுக கட்சியின் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக கட்சியின் எம்.பி டி.ஆர் பாலு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, அண்ணாமலை நான் பத்தாயிரம் கோடி சொத்து சேர்த்து வைத்துள்ளதாக என் மீது குற்றம் சாட்டியுள்ளார். அண்ணாமலைக்கு முதுகெலும்பு இருந்தால் என் மீது கேஸ் போடட்டும். நான் இதுவரை அனுப்பிய வக்கீல் நோட்டீஸ்க்கு அண்ணாமலை பதிலளிக்கவில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது நான் என்ன சொத்து விவரங்களை காண்பித்தேனோ அது மட்டும் தான் என்னிடம் இருக்கிறது.

அதுக்கு மேல் ஏதாவது என்னிடம் சொத்து இருந்தால் திமுகவினர் என்னை தொங்கவிட்டு அடிக்கட்டும். திமுகவை அசைத்துப் பார்க்கலாம் என பாஜகவும் அதிமுகவும் நினைத்தால் திமுக கட்சியின் தொண்டன் அவர்களை ஓட ஓட விரட்டி அடிப்பான். மிரட்டி பார்க்கும் வேலையை திமுகவினரிடம் வைத்துக் கொள்ள வேண்டாம். அதற்கெல்லாம் பயப்படும் ஆள் நாங்கள் இல்லை. மேலும் அண்ணாமலை என் மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகளுக்காக அவர் மீது வருகின்ற 8-ம் தேதி சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடர்வேன் என்று கூறினார்.