குஜராத் மாநிலம் சூரத்தில் பிரபல ரவுடியான சதீஷ் தாக்டே என்ற சதீஷ் மராத்தா என்பவர் ப வெட்டிக் கொல்லப்பட்ட படுகொலை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை மதிய வேளையில் சூரத் மாவட்டம் பேஸ்தான் பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

32 வயதான சதீஷ் மராத்தா, தனது பெண் தோழி ஒருவருடன் காரில் சென்றுகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை மறித்துள்ளனர். காரின் கண்ணாடியை அடித்து உடைத்து அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டவே, சுதாரித்துக்கொண்ட சதீஷ், தனது தோழியை அங்கிருந்து தப்பியோடும்படி கூறியுள்ளார். பின்னர் காரைவிட்டு வெளியேறி அவர் எதிரிகளை எதிர்கொண்டபோதுதான், அங்கு மறைந்திருந்த மற்ற கும்பல் சூழ்ந்து கொண்டது.

 

சதீஷுக்குத் தெரியாமல் ஏற்கனவே 6 முதல் 8 பேர் கொண்ட கும்பல் பைக்குகளில் பதுங்கியிருந்தனர். அவர்கள் திடீரென வாள், கத்தி மற்றும் கோடாரிகளுடன் சதீஷைத் துரத்தத் தொடங்கியுள்ளனர். கும்பலில் இருந்த ஒருவன் அவரை நோக்கித் துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டுள்ளான். சுமார் 50 மீட்டர் தூரம் வரை சினிமா பாணியில் ஓட ஓட விரட்டிச் சென்றுள்ளனர்.

தன்னைத் தற்காத்துக் கொள்ள முயன்ற சதீஷின் கைவிரல்கள் கொடூரத் தாக்குதலில் துண்டிக்கப்பட்டன. எதிரிகள் விடாமல் அவரது தலை மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் சரமாரியாகத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பொதுமக்கள் திரண்டதைப் பார்த்ததும் அந்த  கும்பல் மோட்டார் சைக்கிள்களில் தப்பியோடியது. சதீஷின் பெண் தோழி அளித்த தகவலின் பேரில் பேஸ்தான் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

 

கொலை செய்யப்பட்ட சதீஷின் சகோதரர் ஹிதேஷ் தாக்டே அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர். மகாராஷ்டிராவுக்கு தப்பிக்க முயன்ற ஒன்பது சந்தேக நபர்களை தாபி போலீசார் மடக்கிப் பிடித்தனர். இவர்களில் 3 சிறுவர்கள் அடங்குவர். மற்றவர்களான கேதன் சிர்சாத், ராகுல் துபே, கரண் துபே, அஜித் கோசுவாமி, ஆகாஷ் தாக்கூர் மற்றும் ராகுல் கபூர் ஆகிய 6 பேர் சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஆகஸ்ட் 12 வரை போலீஸ் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கோதாரா பகுதியில் மிளகாய்த்தூள் வீசப்பட்டு சதீஷ் மீது நடத்தப்பட்ட முந்தைய தாக்குதலுக்கும் இதற்கும் தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், சிறையில் உள்ள ரவுடி ராகுல் மண்டல் என்கிற ‘ராகுல் அப்பார்ட்மெண்ட்’ தனது கூட்டாளிக்கு நடந்த தாக்குதலுக்குப் பழிவாங்கும் விதமாக, லாஜ்பூர் மத்திய சிறைக்குள்ளேயே இந்தத் திட்டத்தைத் தீட்டியிருக்கலாமா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.